ADDED : அக் 16, 2025 11:18 PM

வேப்பூர்: வேப்பூர் அருகே வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதுார் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது வயலில் நேற்று மாலை மக்காச்சோளத்திற்குகளை எடுக்கும் பணியில் ஐந்து பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
மாலை 5:30 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. அப்போது, வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியது.
அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த நில உரிமையாளர் சிவகுமாரின் மனைவி ராஜேஸ்வரி, 48, கழுதுார் கிராமத்தை சேர்ந்த கனிதா, 38, பாரிஜாதம், 45, சின்னப்பொண்ணு, 40, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கழுதுாரை சேர்ந்த தவமணி, 42, என்பவரின் இரண்டு கண் பார்வையும் பறிபோனது. வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.