/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நண்பரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த தீர்த்தம் கொடுத்த பூசாரி
/
நண்பரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த தீர்த்தம் கொடுத்த பூசாரி
நண்பரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த தீர்த்தம் கொடுத்த பூசாரி
நண்பரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த தீர்த்தம் கொடுத்த பூசாரி
ADDED : டிச 21, 2024 06:24 AM
சின்னசேலம் : நண்பரின் குடும்பத்தினர் 5 பேருக்கு, விஷம் கலந்த தீர்த்தத்தை கொடுத்துவிட்டு, தானும் குடித்து பூசாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்த வருகின்றனர்.
சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் துளசி மகன் முரளி,45; ஆன்மிகம் மற்றும் குறி சொல்லும் வேலை செய்து வந்த இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அமகளத்துார் கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரி கணேசன்,67; என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதனையொட்டி, 15 ஆண்டிற்கு முன் அமகளத்துார் கிராமத்திற்கு வந்த முரளியை, கணேசன் தனக்கு சொந்தமான இடத்தில் தங்க வைத்தார். அங்கு அவர் அங்காளம்மன் கோவில் அமைத்து அங்கேயே தங்கி அருள்வாக்கு கூறி வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார்.
இதற்காக முரளி, கணேசன் உள்ளிட்ட பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடனை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் சில தினங்களுக்கு முன் முரளியிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று விடியற்காலை 4:30 மணிக்கு வழக்கம் போல், முரளி மார்கழி மாத சிறப்பு பூஜை செய்ததாக கூறி கணேசன், அவரது மனைவி ராசாம்மாள்,60; மகன்கள் முத்தையன்,38; கண்ணன், 34; முரளியின் உதவியாளர் சுப்ரமணி மகன் ராமமூர்த்தி,35; ஆகியோருக்கு, சுவாமி அணிகலன்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பீதாம்பரம் என்ற ரசாயன பவுடர் கலந்த தீர்த்தத்தை கொடுத்துள்ளார்.
அதன்பிறகு, கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டதாக தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முரளி மற்றும் கணேசன் உள்ளிட்ட 6 பேரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, முரளி ஐ.சி.யூ., வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவில் பூசாரி, விஷம் கலந்த தீர்த்தத்தை தனது நண்பர் குடும்பத்திற்கு எதற்காக கொடுத்தார் என்பது குறித்து கீழக்குப்பம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

