ADDED : ஏப் 20, 2026 06:42 PM

பண்ருட்டி: பண்ருட்டி, லட்சுமிபதி நகர் பகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க., அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. அரசு கஜானாவை காலி செய்து, அதிக கடன் உள்ள மாநிலமாக மாற்றியுள்ளது.
இளைஞர்கள், மாணவர்கள் போதை கலாச்சாரத்திற்கு அடிமையாகி வருகின்றனர். எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை , பாலியல் சம்பவம் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பான ஆட்சி. நான், இப்பகுதி மக்களின் பிரச்னைகளை அறிந்தவன். தொகுதிக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன்.
என்னை எப்போதும் சந்திக்கலாம். மக்களுடன் மக்களாக இருப்பேன். என்னுடன் பழகியவர்களுக்கு தெரியும். பண்ருட்டி மக்களின் உரிமைக்காக போராடவும், குரல் கொடுக்கவும் தயங்க மாட்டேன். மக்களுக்காக என்றும் பாடுபடுவேன். எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மோகன் பேசினார்.
இதில் நகர அவை தலைவர் ராஜதுரை, முன்னாள் நகர செயலாளர் முருகன், நகர ஜெ., பேரவை நகர செயலாளர் செல்வம், நகர இணை செயலர் சத்யாகலைமணி, முன்னாள் இளைஞரணி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
