ராட்சத ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இன்ஜின்: 'இஸ்ரோ' சோதனை வெற்றி
ராட்சத ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இன்ஜின்: 'இஸ்ரோ' சோதனை வெற்றி
ADDED : செப் 10, 2026 07:33 PM

சென்னை: அதிக எடையுள்ள ராட்சத ராக்கெட்டை, அதிக விசையுடன் உந்தித் தள்ளும் சி.இ., - 20 கிரையோஜெனிக் இன்ஜினை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி உந்துவிசை நிலையத்தில், 'இஸ்ரோ' வெற்றிகரமாக சோதனை செய்தது.
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உந்து வளாகத்தில், நேற்று 'சி.இ., - 20 கிரையோஜெனிக் இன்ஜின் பிளைட் அக்செப்படன்ஸ் ஹாட் டெஸ்ட்' எனும் சோதனை நடத்தப்பட்டது. இஸ்ரோ, அதிகளவில் தொழில்நுட்ப சாதனங்களை இணைத்து, செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
இதனால், 'பேலோட்' பகுதியின் எடை அதிகரிக்கும். அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த, அதிகளவில் எரிபொருள் தேவை. அதனால், ராக்கெட்டின் எடை அதிகரிக்கும்.
இந்நிலையில், எரிபொருள் எடையை குறைத்து, செயற்கைக்கோளின் எடையை மட்டும் அதிகரிக்கும் வகையில், அதிக திறனுள்ள கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை, இஸ்ரோ மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது, சி.இ., - 20 கிரையோஜெனிக் இன்ஜினின் திறனை, 220 கிலோ நியூட்டன் என்ற அதிக உந்துவிசை நிலையில் இயக்குவதற்கான சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை, வெற்றி பெற்றுள்ளது.
இந்த இன்ஜின், எல்.வி.எம்., 3 - எம்7 விண்வெளி திட்டத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் மேலடுக்கில் உள்ள, 'சி32'ல் பொருத்த தகுதி பெற்றுள்ளது.
மேலும், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் வகையிலான விண்கலத்திற்கான திரவ ஆக்சிஜன் தொட்டியை, சரியான அழுத்தத்தில் வைக்கும் திறன்களும் சோதிக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை வெற்றி பெற்றதால், இதுவரை, 19 டன்னாக இருந்த, சி.இ., - 20 இன்ஜினின் உந்துவிசை, இனி 22 டன்னாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வணிக ரீதியிலான கனரக தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள், அதிக எடையுள்ள அறிவியல் ஆய்வுக்கான விண்கலங்களை எளிதாக விண்ணில் செலுத்த முடியும்.
