ADDED : டிச 03, 2024 06:31 AM
கடலுார்: கடலுார் முதுநகர் அருகே குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை வண்டிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையம், சலங்கை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதில் குப்பை கிடங்கிலிருந்தும் குப்பைகள் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீரில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 10:30 மணிக்கு மாநகராட்சியிலிருந்து ஆறு குப்பை வண்டிகள், குப்பைகளை கொட்டுவதற்கு கிடங்குக்கு சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குப்பை வண்டிகளை சிறை பிடித்து குப்பைகளை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் சமாதானம் அடையாததால், குப்பை வண்டிகள் திருப்பி அனுப்பப்பட்டது.
