ADDED : மே 03, 2025 02:01 AM

பெண்ணாடம்: ஆடு திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 36; விவசாயி. இவர் 4 ஆடுகள் வளர்க்கிறார். வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு மாலை 6:00 மணிக்கு வீட்டு வாசலில் கட்டிவிட்டு, இரவு துாங்கச் சென்றார்.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அருகில் வசிக்கும் வீரமுத்து, இயற்கை உபாதைக்கு எழுந்தபோது, சந்திரசேகர் வீட்டு வாசலில் கட்டியிருந்த ஆடுகளை 2 மர்ம நபர்கள் திருட முயன்றதை கண்டு கூச்சலிட்டார்.
சந்திரசேகர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பைக்கில் தப்ப முயன்ற 2 பேரையும் பிடித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், 2 பேரையும் விசாரித்தனர். இதில், விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் பாபு மகன் கோபிநாத், 25; நாகராஜன் மகன் அரவிந்தன், 28, என்பதும், இருவரும் பல கிராமங்களில் ஆடுகள் திருடியதும் தெரிந்தது.
உடன், சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.