/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை - உளுந்தூர்பேட்டை சாலை நிழற்குடைகள் வீணாகிறது: பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
/
விருதை - உளுந்தூர்பேட்டை சாலை நிழற்குடைகள் வீணாகிறது: பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
விருதை - உளுந்தூர்பேட்டை சாலை நிழற்குடைகள் வீணாகிறது: பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
விருதை - உளுந்தூர்பேட்டை சாலை நிழற்குடைகள் வீணாகிறது: பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
ADDED : மார் 05, 2024 06:19 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 136 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலையில், காட்சிப்பொருளாக மாறிய நிழற்குடைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், கடலுார் துறைமுகம், சேத்தியாத்தோப்பு, பெண்ணாடம், வேப்பூர் பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகள், பெண்ணாடம் தளவாய், ஆலத்தியூரில் உள்ள சிமென்ட் ஆலைகள், சேலம் இரும்பு உருக்காலைகள் மற்றும் மணல் குவாரிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
அதில், கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்.,) சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடலுார், சிதம்பரம், புதுச்சேரி, சேலம், ஆத்துார், திருச்சி, பெரம்பலுார், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பயண நேரம் வெகுவாக குறைந்தது.
ஆனால், விருத்தாசலம் வழியாக உளுந்துார்பேட்டை, விழுப்புரம், சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே உள்ள 22 கி.மீ., துார நெடுஞ்சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமமடைந்தனர்.
ரூ.136 கோடியில் சீரமைப்பு
இந்நிலையில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 22.855 கி.மீ., தொலைவிற்கு 136 கோடி ரூபாய் நிதியில் பணிகள் முடிந்தது. மேலும், மங்கலம்பேட்டை நகருக்கு வெளியே ரூபநாராயணநல்லுார் சமத்துவபுரத்தில் இருந்து நகருக்கு வெளியே வரை 5 கி.மீ., துாரத்திற்கு புதிதாக புறவழிச்சாலையும் போடப்பட்டது.
வீணான நிழற்குடைகள்
சாலையில் கிராமப்புற பயணிகள், நெடுந்துார பயணிகள் இளைப்பாரும் வகையில் பெரியவடவாடி, விஜயமாநகரம், கோ.பூவனுார், ரூபநாராயணநல்லுார், மங்கலம்பேட்டை புறவழிச்சாலை என பிரதான பஸ் நிறுத்தங்களில் சாலையின் இருபுறம் நிழற்குடைகள் கட்டப்பட்டன. இரு கழிவறைகள், டைல்ஸ் வசதியுடன் இருக்கைகள் கட்டப்பட்டன. தண்ணீர் வசதிக்கு பிளாஸ்டிக் பாரல்களும் பொறுத்தப்பட்டன. ஆனால், தண்ணீர் வசதியின்றி கழிவறைகள் காட்சிப் பொருளாகின. அதிலிருந்த கதவுகள் பெயர்ந்து கிடக்கின்றன. மேலும், டைல்ஸ் பெயர்ந்து, பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
கிராமங்கள் நிறைந்த விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில், நவீன வசதியுடன் நிழற்குடைகள் கட்டியும் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் பொது இடத்தில் இயற்கை உபாதைக்கு பயன்படுத்தும் அவலம் தொடர்வதால், பஸ் நிறுத்தங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் வீணான நிழற்குடைகளை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

