/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட சென்ற வீட்டில் சிறுவன் உடல் கண்டெடுப்பு
/
விளையாட சென்ற வீட்டில் சிறுவன் உடல் கண்டெடுப்பு
ADDED : அக் 06, 2024 01:47 AM

நடுவீரப்பட்டு: கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மனைவி புவனேஸ்வரி. சரவணன், சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இதையடுத்து, புவனேஸ்வரியின் மகன் ஜனார்த்தனன், 10, பாலுார் நடுகாலனியில் உள்ள புவனேஸ்வரியின் தாய் ஆனந்தாயி வீட்டில் தங்கி, சன்னியாசிப்பேட்டை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
அந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு, பக்கத்து வீட்டில் விளையாட செல்வதாக கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், அவரது மாமா வசந்த் தேடி சென்றார். அப்போது, பக்கத்து வீடான ஷோபனா என்பவரது வீட்டில், கழுத்தில் துணியால் துாக்குபோட்ட நிலையில், ஜனார்த்தனன் தொங்கியபடி இருந்தார். ஜனார்த்தனனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, நடுவீரப்பட்டு போலீசில் புவனேஸ்வரி கொடுத்த புகாரின்படி, சிறுவனின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.