/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் புற்றீசல்களாக பட்டாசு கடைகள்... அதிகரிப்பு; விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
/
மாவட்டத்தில் புற்றீசல்களாக பட்டாசு கடைகள்... அதிகரிப்பு; விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
மாவட்டத்தில் புற்றீசல்களாக பட்டாசு கடைகள்... அதிகரிப்பு; விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
மாவட்டத்தில் புற்றீசல்களாக பட்டாசு கடைகள்... அதிகரிப்பு; விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
ADDED : அக் 04, 2025 07:16 AM

விருத்தாசலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் புற்றீசல்களாக விதிமீறும் பட்டாசு கடைகளை கண்காணிப்பதுடன், கள்ளச்சந்தையில் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி என்றாலே முக்கிய இடத்தை பிடிப்பது பட்டாசுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கம்.
பட்டாசு விபரீதம் புரியாத சிறுவர்கள் சிலர், முன்னெச்சரிக்கை இல்லாமல் தீ விபத்தில் சிக்கி காயமடைவது வழக்கம். இதற்காக, அந்தந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பள்ளிகள் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதுபோல், பட்டாசு தொழிற்கூடம், உரிமம் பெற்ற மற்றும் உரிமம் கோறும் பட்டாசு கடைகளில் வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் போலீசார் என ஒருங்கிணைந்து தடையில்லா சான்று தரும் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்வது வழக்கம்.
அப்போது, அவசர கால விபத்துகளில் வெளியேறும் வகையில் இருபுற வழிகள், புதுப்பிக்கப்பட்ட மின்சாதன ஒயர்கள், மின் விளக்குகள் மற்றும் மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டி போன்ற தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், சிகரெட், பீடி போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை உபயோகிக்க கூடாது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கடைகளுக்கு முன் பொருத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் சேமிப்பு குடோன்கள், பட்டாசு கடைகளில் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும்.
கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால், புதிதாக உரிமம் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மேலும், பட்டாசு கடைக்கு உரிமம் பெறாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் ஆகியன வெடிமருந்துச் சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்.
ஆனால், ஆண்டுதோறும் விதிமுறைகளை மீறி புற்றீசல்போல பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன. இவற்றை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தற்போது, மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கோட்டங்களில் புதிதாக அனுமதி கோரும் கடைகள், உரிமம் புதுப்பிக்கும் கடைகளில் அதிகாரிகள் களஆய்வு செய்கின்றனர்.
அதில், உரிய வழிகாட்டி முறைகள் இல்லாத கடைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும்.
வருவாய், தீயணைப்பு, காவல் துறைகளில் அனுமதி பெற்றால் மட்டுமே பட்டாசு கடை நடத்த முடியும். இதற்கென கட்டுப்பாடுகள் இருந்தாலும், குறுக்கு வழியில் சிலர் அனுமதி பெறுவது தொடர்கிறது. கடந்த காலங்களில் 50 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் பட்டாசு கடைக்கு எளிதில் அனுமதி கிடைக்கும் வகையில், ஓய்வுபெற்ற சில அரசு அதிகாரிகள் கூட நேரடியாக களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி விற்பனைக்கு அதிக சப்தம் தரும் பட்டாசுகள், கள்ளச்சந்தையில் தயாராகின்றன. இவை வெடித்து சிதறும்போது காகித துகள்கள் அதிகளவு சிதறுவதுடன், சப்தமும் எல்லை மீறி கேட்கிறது. இதனை சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி வாங்குவதால், விற்பனையும் அதிகமாக உள்ளது. ஆனால், அதிகளவு வெடிமருந்து திணித்து உருவாக்கப்படும் பட்டாசுகளால், உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற பட்டாசு உற்பத்தியை வருவாய்த்துறை கவனித்து தடுக்க வேண்டும்.
பண்டிகை காலங்களுக்கு முன்கூட்டியே சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் வாங்கி, சேமித்து வைக்கின்றனர். 500 முதல் 2,000 ரூபாய் வரை பட்டாசுகள் எண்ணிக்கை பொறுத்து இதன் விலை உள்ளது. அனுமதி பெறாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர், பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்களுக்கு மொத்தமாக கிப்ட் பாக்ஸ்களை இலவசமாக கொடுத்து, நடவடிக்கையில் இருந்து தப்பி விடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.