/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் - விருதை தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'; விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டி சாய்ப்பு
/
கடலுார் - விருதை தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'; விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டி சாய்ப்பு
கடலுார் - விருதை தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'; விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டி சாய்ப்பு
கடலுார் - விருதை தேசிய நெடுஞ்சாலை 'வெறிச்'; விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டி சாய்ப்பு
ADDED : அக் 14, 2024 11:18 PM

குள்ளஞ்சாவடி : கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடலுார் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல் விருத்தாசலம் இரட்டை மேம்பாலம் வரை, 52 கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக, கடலுாரில் இருந்து விருத்தாசலம் வரையில் சாலையோரம் இருந்த 1,152 மரங்கள் வெட்டப்படுகிறது.
அதில், குள்ளஞ்சாவடி - தம்பிப்பேட்டை வரையிலான, 10 கி.மீ., பகுதியில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த வாகை, ஆலமரம், வேம்பு, ஒதியம், புளியமரம், மாமரம், நாவல் என 110 மரங்களில் 72 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
அதேபோன்று குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் 190 பனைமரங்கள் வெட்டப்பட உள்ளது. அதில் ஒருபுறத்தில் இருந்த 60 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. வடலுார் அடுத்த ஆண்டிக்குப்பம் இளங்கோ நகர் பகுதியில் ராட்சத மரங்கள் வெட்டப்பட்டு மழை நீர் கால்வாய் கட்டி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், கடலுார்-விருத்தாசலம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை, பசுமை சூழல் மறைந்து வெட்ட வெளியாக வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிழல் தந்து வந்த மரங்கள் வெட்டப்படுவது வேதனையாகத்தான் உள்ளது.
ஆனால், இன்றைய மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.
அதனால், வெட்டப்படும் மரங்களுக்கு இரு மடங்கு மரக்கன்றுகள சாலை ஓரத்தில் நடவேண்டும். இதனை, சம்பிரதாயத்திற்கு செய்யாமல், இச்சாலையை பராமரிக்கும் நிறுவனம் மரக்கன்றுகளை நட்டு, முறையாக பராமரித்து மீண்டும் பசுமை சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.