மானை வேட்டையாடியவர் கைது துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்
மானை வேட்டையாடியவர் கைது துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்
ADDED : மே 22, 2025 02:07 AM

பெண்ணாடம்,:பெண்ணாடத்தில் மானை வேட்டையாடி, இறைச்சி விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மூன்று பேர், மான் இறைச்சி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெண்ணாடம் போலீசார் சென்று பார்த்தபோது, மான் இறைச்சி விற்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் சிக்கினார். இருவர் தப்பினர்.
பிடிபட்ட நபர், விருத்தாசலம், பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ், 32, என்பதும், பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே வசிப்பதும் விசாரணையில் தெரிந்தது.
இவர், நேற்று முன்தினம் இரவு வேப்பூர், கண்டப்பங்குறிச்சி காப்புக்காட்டில் மானை வேட்டையாடி, நேற்று நரிக்குறவர் குடியிருப்பில் அதன் இறைச்சியை விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின்படி, விருத்தாசலம் வனச்சரகத்தினர் வழக்கு பதிந்து, சுரேஷை கைது செய்தனர். 15 கிலோ மான் இறைச்சி, நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.
