/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
/
நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:56 AM

கடலுார்: நிதி பற்றாக்குறை காரணமாக வடலுார் நகராட்சி வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியாமல் தள்ளாட்டம் கண்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி தாலுகாவில் இருக்கும் ஒரு நகரம் தான் வடலுார். இது 2ம் நிலை நகராட்சியாகும். சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையும், கடலுார்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலுார் உள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், போன்ற ஊர்களில் இருந்து, வடலுார் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திருப்பதி, பெங்களூரு, திருப்பூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிகள் அதிகளவில் உள்ளன.
இந்நகராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, வாகீசம் நகர், காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர்.சி., காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் உள்ளன.
தற்போது, என்.எல்.சி., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு அதிகளவில் குடியேறுவதால் ஆர்.கே.மூர்த்தி நகர், என்.எல்.சி., ஆபீசர் நகர், புதுநகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்ற புதிய நகர்கள் உருவாகியுள்ளன.
பேரூராட்சியாக இருந்த வடலுார் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. வடலுார் நகராட்சி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 19.93 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படி 9,736 வீடுகள் உள்ளன.
இதில் 39,514 பேர் வசிக்கின்றனர். ராமலிங்க அடிகளார் வடலுாரில் 1972 ஜனவரி 25ல் சத்திய ஞானசபை நிறுவினார். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் போதிய அளவு நிதி கிடைக்கவில்லை. அதனால் வளர்ச்சிப் பணிகள் சரியாக நடக்கவில்லை.
வடலுார் பஸ் ஸ்டாண்டு கட்டுமானப் பணியில் இருப்பதால் வாடகையும் வசூலிக்க முடியவில்லை. இதனால் நகராட்சிக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. சொத்துவரி இன்னும் ஏற்றப்படாமல் பழைய வரியே வசூலிக்கப்படுகிறது.
இதில் வரும் வருவாயைக் கொண்டுதான் வடலுார் நகரப்பகுதிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்டவற்றிக்கு மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் நடைபெறாததால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முடங்கியுள்ளனர். இனி வரும் காலங்களில் மாவட்ட அமைச்சர் நிதி பெற்றுத் தந்தால்தான் நகராட்சியாக மேம்பாடு அடையும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.