ADDED : நவ 14, 2025 11:30 PM

நடுவீரப்பட்டு: 'தினமலர் - பட்டம்' இதழின்,வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் தொழிலதிபர் காண்டீபன் சார்பில், தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையிலும் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து, 'பதில் சொல் பரிசு வெல்' வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது.
இதில் 16 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம், 8 குழுக்களாக பிரிந்து, 2 சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. இதில், மாணவிகள் யமுனா, சஞ்சனா ஆகியோர் முதலிடமும், மாணவிகள் நித்யாஸ்ரீ, காவ்யா ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
மேலும் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

