ADDED : ஜன 31, 2025 08:05 AM

கடலுார்; கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலை விரிவாக்கம் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலையில், மாவட்ட நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், அரசு கருவூலம், அருங்காட்சியகம், சப் ஜெயில் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் செயல்பட்டு வருகிறது. இச்சாலையில் வாகனங்கள் மற்றும் மாணவர்கள், அதிகளவில் செல்வதால், போக்குவரத்து நெரிசலாக உள்ளது.
இச்சாலையை விரிவாக்கம் செய்து, நடைபாதை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே உள்ள 20 அடி சாலையை மாற்றி, 44 அடியாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் ரூ. 30 லட்சம் மதிப்பில் துவங்கப்படவுள்ளது.
இதற்காக, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர்த்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் நேற்று மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

