/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம்- சென்னைக்கு நேரடி ரயில் சேவை எதிர்பார்ப்பு: பொதுமக்கள் நின்றுகொண்டே பயணிக்கும் அவலம்
/
விருத்தாசலம்- சென்னைக்கு நேரடி ரயில் சேவை எதிர்பார்ப்பு: பொதுமக்கள் நின்றுகொண்டே பயணிக்கும் அவலம்
விருத்தாசலம்- சென்னைக்கு நேரடி ரயில் சேவை எதிர்பார்ப்பு: பொதுமக்கள் நின்றுகொண்டே பயணிக்கும் அவலம்
விருத்தாசலம்- சென்னைக்கு நேரடி ரயில் சேவை எதிர்பார்ப்பு: பொதுமக்கள் நின்றுகொண்டே பயணிக்கும் அவலம்
ADDED : மார் 14, 2024 11:52 PM
விருத்தாசலம், மார்ச் 1௫- விருத்தாசலத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல், இப்பகுதி ரயில் பயணிகள் கடும் அவதிக்கிடையே பயணிக்கும் நிலை தொடர்கிறது.
திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு ஆகும். இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சரக்கு ரயில்கள் என தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
அதுபோல், சேலம் - கடலுார் மார்க்கமாக செல்லும் ரயில்களும், விருத்தாசலம் ரயில் நிலையம் வந்து, இன்ஜின் மாற்றம் செய்து புறப்படுகிறது.
இதன் மூலம் கல்வி, மருத்துவம், வணிகம் என நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர்.
இந்நிலையில், தலைநகரான சென்னைக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல், திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்களில் முண்டியடித்து ஏறி பயணம் செய்யும் அவல நிலை நீடித்து வருகிறது.
ரயிலின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் உள்ள முன்பதிவு இல்லாது பொதுப்பயண பெட்டிகளில் நிற்க கூட முடியாத நிலையில், சென்னைக்கு 3 மணி நேரத்திற்கு மேலாக பயணிக்கும் நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 5:20 மணிக்கு புறப்படும், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நீட்டிக்கப்படவில்லை.
அந்த ரயிலை நீட்டிப்பு செய்தால், விருத்தாசலம் மற்றும் சுற்றுபுற பகுதி களில் இருந்து சென்னைக்கு செல்லும் கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மருத்துவமனை செல் வோர் குறித்த நேரத்தில் சென்றடைய முடியும்.
சென்னையில், கிளாம்பாக்கத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டதால் சென்னையில் கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்வோர், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாசஞ்சர் ரயிலை, விருத்தாசலம் வரையில் நீட்டித்து, அங்கிருந்து புறப்பட செய்தால், ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
அதுபோல், கடலுாரில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம், ஈரோடு மார்க்கமாக கோவைக்கு ரயில் விட வேண்டும். இதனால், சேலம், ஈரோடு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு கடலுார் மாவட்டத்தில் இருந்து எளிதில் சென்று வருவதுடன், வியாபார ரீதியாகவும் பயனடைய முடியும்.
மேலும், வாரந்தோறும் வியாழன், ஞாயிறு கிழமைகளில் நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில், விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இந்த ரயில்களில், பெரும்பாலான பயணிகள் விருத்தாசலத்தில் இருந்து தான் செல்கின்றனர். ஆனால், முன்பதிவு செய்யாத பயணிகள், பல மணி நேரம் நின்றபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.
எனவே, விருத்தாசலத்தில் இருந்து மும்பைக்கு நேரடியாக ரயில் வசதி ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மார்க்க ரயில் பயணிகள் பெரிதும் பயனடைவர். பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் என ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே, விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு பாசஞ்சர் ரயிலை நீட்டிப்பு செய்வதும், கூடுதலாக ரயில்களை விடவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

