/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் கொள்முதல் நிலையத்தில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பு
/
பெண்ணாடம் கொள்முதல் நிலையத்தில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பு
பெண்ணாடம் கொள்முதல் நிலையத்தில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பு
பெண்ணாடம் கொள்முதல் நிலையத்தில் நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பு
ADDED : ஜன 22, 2025 11:42 PM

பெண்ணாடம்; பெண்ணாடம் பகுதிகளில் சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைக்கொட்டி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெண்ணாடம் மற்றும் மாளிகைக்கோட்டம், அரியராவி, நந்தப்பாடி, வெண்கரும்பூர், தீவளூர், தாழநல்லுார் , திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்திருந்தனர்.
ஆண்டுதோறும் சம்பா அறுவடையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்கூட்டியே மாவட்டத்தில் அந்தந்த முக்கிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில்,நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடங்கள் தேர்வு செய்து, இதுவரை திறக்கவில்லை.
ஆனால் ஓரிரு நாட்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், அரியராவி கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கும் இடத்தில் முன்பதிவிற்காக நெல்லை கொட்டியும், அடுக்கி வைத்தும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதேபோன்று, மாளிகைக்கோட்டம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன்கருதி, பெண்ணாடம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பார்வையிட்டு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாளிகைக்கோட்டம் விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடந்த வாரம் நெல் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு விற்க வந்தோம். ஆனால் இதுவரை திறக்கவில்லை. அறுவடை பணிகள் தீவிரமாக நடப்பதால் நெல் மூட்டைகளும் நாளுக்குநாள் அதிக அளவில் வர துவங்கும். தற்போது காலை, இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நெல் நனைந்து சேதமாகும் முன் கொள்முதல் நிலையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.