/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலைக்கழக போலி சான்றிதழ் வழக்கு; தி.மு.க., பொறுப்பாளர் உட்பட 4 பேர் கைது
/
பல்கலைக்கழக போலி சான்றிதழ் வழக்கு; தி.மு.க., பொறுப்பாளர் உட்பட 4 பேர் கைது
பல்கலைக்கழக போலி சான்றிதழ் வழக்கு; தி.மு.க., பொறுப்பாளர் உட்பட 4 பேர் கைது
பல்கலைக்கழக போலி சான்றிதழ் வழக்கு; தி.மு.க., பொறுப்பாளர் உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 19, 2025 11:36 PM

கடலுார்,: அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த தி.மு.க., பொறுப்பாளர் உட்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார், பெங்களூருவில் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்கள் குவியலாக கிடந்தன. கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.
போலி சான்றிதழ் தயாரித்த சிதம்பரம் மன்மதசாமி நகர் சங்கர், 37; கிருஷ்ணமூர்த்தி நகர் நாகப்பன், 50; அருட்பிரகாசம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களின் வீடுகளில் போலி சான்றிதழ்கள், லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். போலி சான்றிதழ்கள் மூலம் சித்த மருத்துவம் பார்த்தவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
முக்கிய நபராக செயல்பட்ட திருச்சியை சேர்ந்த போலி சித்த வைத்தியர் சுப்பையா பாண்டியன், 67; என்பவரை கடந்த செப்., மாதம் கைது செய்து விசாரித்தனர். அவர், முக்கிய குற்றவாளியான சிதம்பரத்தை சேர்ந்த, புதுச்சேரி காமராஜ் சாலை சத்தியா நகரில் வசிக்கும் கவுதம் என்கிற ஒஸ்தின் ராஜா, 51; என்பவரிடம் போலி சான்றிதழ்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதையடுத்து ஒஸ்தின் ராஜா தலைமறைவானார். போலி சான்றிதழ் தயாரிக்க ஒஸ்தின் ராஜாவுக்கு உறுதுணையாக இருந்த, அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஊழியரான கொத்தங்குடியை சேர்ந்த அசோக்குமார், 45; என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒஸ்தின் ராஜா கடந்த 6 மாதங்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஒரு வாரத்திற்கு ஒரு மாநிலம் என தங்கி, மொபைல்போன் சிம்கார்டுகளை மாற்றி மாற்றி பேசி வந்துள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவந்தனர்.
அவரது மொபைல்போன் டவரை கண்காணித்தபோது, பெங்களூரு பஸ் நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பெங்களூருக்கு சென்று, ஒஸ்தின் ராஜா, அவரது தம்பி கந்தமங்கலத்தை சேர்ந்த நெல்சன், 48; சிதம்பரம் எம்.கே., தோட்டத்தை சேர்ந்த எலக்ட்ரிஷியன் தமிழ்மாறன், 53; வேப்பூரில் தனியார் நர்சிங் இன்ஸ்டியூட் நடத்தி வருபவரும், தி.மு.க., மருத்துவரணி திட்டக்குடி தொகுதி பொறுப்பாளருமான ஈ.கீரனுாரை சேர்ந்த தங்கதுரை, 41; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து, 15 மொபைல் போன்கள், 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், நெல்சன் பயன்படுத்திய டொயோட்டா பார்ச்சுனர் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழ்மாறன் பெயரில் உள்ள பார்ச்சுனர் காரை வழக்கில் சேர்ந்துள்ளனர். அந்த கார் விபத்து வழக்கு ஒன்றில் புதுச்சேரி டிராபிக் போலீசில் உள்ளது.
போலீசார் கூறுகையில், ''இவ்வழக்கில் சங்கரை போலீசார் கைது செய்தபோது, அவரது வீட்டில் இருந்த போலி சான்றிதழ்கள், கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஒஸ்தின் ராஜாவிற்கு ஆதரவாக, நெல்சன் ஆட்டோவில் எடுத்துச் சென்று அழித்துள்ளார்
தமிழ்மாறன், ஒஸ்தின் ராஜாவிற்கு பினாமியாக செயல்பட்டு வருகிறார். ஒஸ்தின் ராஜாவிற்கு போலி சான்றிதழ் மூலம் வரும் பணம் முழுவதும் தமிழ்மாறன் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.
நர்சிங் இன்ஸ்டியூட் நடத்தி வரும் தங்கதுரை, ஒஸ்தின் ராஜாவிற்கு வலதுகரமாக இருந்து வந்துள்ளார். மொத்தமாக போலி சான்றிதழ்களை வாங்கியும், விற்பனை செய்து வந்துள்ளார். இதனால், நான்கு பேரும் ஒரே இடத்தில் தலைமறைவாக இருந்து வந்தனர். கடந்த 6 மாதத்தில் 50க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், மொபைல் போன்கள் பயன்படுத்தி உள்ளனர்'' என தெரிவித்தனர்.

