ADDED : செப் 12, 2026 07:31 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி, அய்யனார் கோவில் தெருவில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது.
நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், ‘பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் கழிவுகளை 4 வகையான தொட்டிகளில் பிரித்து வழங்க வேண்டும். பச்சை நிற தொட்டியில் மக்கும் குப்பை; நீலநிற தொட்டியில் மக்காத குப்பைகள்; சிவப்பு நிற தொட்டியில் ஆபத்தான வீட்டுக்கழிவுகள்; கருப்பு நிற தொட்டியில் மின்சார கழிவுகள் என தனித்தனியாக பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் துாய்மை பணி ஆய்வாளர் (பொறுப்பு) ஆறுமுகம், நகராட்சி அனிமேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
