/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் இறந்த பெயிண்டர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
விபத்தில் இறந்த பெயிண்டர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த பெயிண்டர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த பெயிண்டர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : ஏப் 24, 2025 07:00 AM

கடலுார்; விபத்தில் இறந்த பெயின்டர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால், கடலுாரில் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம், சேட்டு நகரைச் சேர்ந்தவர் கணேசன், பெயின்டர். இவர் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி,  திருநெல்வேலி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு எலந்தைகுளம் அருகில் வேனில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் கணேசன்  உயிரிழந்தார். இது குறித்து தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இறந்த கணேசனின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் நஷ்ட ஈடு பெற்று தர கோரி கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றத்தில் இறந்த கணேசன் குடும்பத்தினருக்கு, 5.29 லட்ச ரூபாயும், அதனுடன் 6 சதவீதம் வட்டியுடனும், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி 50 சதவீதமும், மதுரை போக்குவரத்து கழகம் 50 சதவீதமும் வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரவிட்டனர்.  நஷ்டஈடு  செலுத்தாததால்  மதுரை போக்குவரத்து கழக அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி சுபத்ரா தேவி உத்தரவிட்டார். அதன்படி மதுரை கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் கடலூர் பஸ் நிலையத்தில் ஜப்தி செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.

