/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மைதானத்தில் கடைகள் கட்ட ஐகோர்ட் தடை உத்தரவு
/
மைதானத்தில் கடைகள் கட்ட ஐகோர்ட் தடை உத்தரவு
ADDED : டிச 12, 2025 06:49 AM

கடலுார்: கடலுார் மாநகர மத்தியில் உள்ள மைதானத்தை சுற்றி கடைகள் கட்டி இயற்கை எழிலை சின்னா பின்னமாக்கும் செயலுக்கு சென்னை ஐகோர்ட் தடைவிதித்துள்ளது.
கடலுார் மாநகர மையத்தில் உள்ள திறந்த வெளி மைதானம் 24 ஏக்கர் பரப்பரவு கொண்டது. அதில் அண்ணா விளையாட்டரங்கம் போக, மீதியிடம் காலியிடம் உள்ளது.
இந்த பகுதி முழுவதும் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், மைதானத்தை குதிரை லாயமாக பயன் படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது, மைதானம் முழுக்க கடைகளாக மாறவிருக்கிறது. கடலுார் நகராட்சியாக இருந்ததை கடந்த 2021ம் ஆண்டு அக்., 22ம் தேதி மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்தது.
மாநகராட்சியின் வருவாயை பெருக்க கடைகளை கட்டி வாடகைக்கு விடுவது என முடிவு செய்யப்பட்டது. தற்போது, ரூ.14.15 கோடியில், 77 கடைகள் கட்ட துவக்க விழா நடந்து முடிந்துள்ளது.
இப்படி கட்டப்படும் கடைகளால் திறந்த வெளிக்குள் காற்று வருவது தடைபடும். மேலும் மைதானத்தின் இயற்கை அழகும் கெட்டுவிடும் என மூத்த குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பல்வேறு போராட்டங்களும் நடந்தன.
இந்நிலையில் கலெக்டர் அலுவலக சாலையில் கடைகள் கட்டுவதற்காக சாலையோரம் இருந்த பல ஆண்டுகள் பழமையான, 19 மரங்களை அடியோடு வெட்டி அகற்றினர்.
இந்த செயலால் மாநகராட்சி மீது பொது மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். தொடர்ந்து, பா.ம.க., தலைமை யில், மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து அ.தி.மு.க., வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஆனந்தகுமார் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மைதானத்தை சுற்றி அதன் மாண்பையும், பொது நல பயன்பாட்டினை சீர்குலைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வரும் நிரந்தர கட்டுமான பணிகள் கூடாது என தடை உத்தரவு வழங்கியுள்ளது.
அந்த தடை உத்தரவுடன் வழக்கறிஞர் ஆனந்தகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் நேற்று கடலுார் கமிஷனர் முஜ்புர் ரஹ்மானிடம் மனுவை கொடுத்தனர்.
கடலுார் மஞ்சைநகர் மைதானம் பாரம்பரியமான ஒரு திடல். எத்தனையோ முதல்வர்கள் பேசிய ஒரு அதிர்ஷ்டமான இடம்.
இந்த மைதானத்திற்குள் எவ்வளவு கூட்டம் வந்தாலும் உள்வாங்கக்கூடியது. இந்த மைதானத்தை சுற்றிலும் கடைகளை கட்டினால் மைதானம் குறுகலாகி வருகிறது. இந்த திடலுக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், மைதானத்தில் இருந்து தப்பியோட கூட வழியில்லை.
மாநகராட்சி சொத்துவரியை உயர்த்திவிட்டது. இது போதாது என்று ஆளுங்கட்சி தனி மனித வருவாய்க்காக இந்த கடைகளை கட்டுகின்றனர். இதற்காக சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இதை நிரந்தரமாக நிறுத்த பொதுமக்கள் ஒரணியில் திரண்டு போராட வேண்டும்
- ஆடிட்டர் சுந்தரமூர்த்தி,
அ.ம.மு.க., மாவட்ட செயலாளர்

