ADDED : அக் 03, 2024 03:00 AM

விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் உள்வாங்கிய சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை வழியாக சேலம், விழுப்புரம், சென்னை, வேலுார், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறுகிய சாலையான இதனை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை - கன்னியாக்குமரி தொழிற்தட சாலை திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 136 கோடி ரூபாயில் 22.855 கி.மீ., தொலைவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில், மங்கலம்பேட்டை நகருக்கு வெளியே 5 கி.மீ., தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
அதில், எலவனாசூர்கோட்டை செல்லும் பிரிவு சாலையில் உள்வாங்கி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.
வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் சேதமடைந்த சாலையில் விபத்து அபாயம் அதிகரித்தது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சிறப்பு திட்டத்தின் உதவி கோட்டப் பொறியாளர் திருமலை தாதாச்சாரி, உதவி பொறியாளர் எழிலரசி ஆகியோர் பார்வையிட்டு, உள்வாங்கிய பகுதியை சீரமைக்கும் பணி நடந்தது.