ADDED : டிச 11, 2025 05:53 AM

விருத்தாசலம்: மார்கழி மாதம் துவங்குவதால், விருத்தாசலத்தில் கலர் கோலமாவு விற்பனை அமோகமாக நடக்கிறது.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில், மார்கழி மாதம், தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாக கருதப்படுகிறது.
இம்மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டு வாசலில் பல வண்ணங்களில் கோலம் போட்டு, மகா விஷ்ணுவுக்கு விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.
அதன்படி, வரும் 16ம் தேதி, மார்கழி மாதம் துவங்குவதால், விருத்தாசலம் சன்னதி வீதி, பாலக்கரை பகுதிகளில் உள்ள கடைகள், தற்காலிக கடைகளில் பல வண்ணங்களில் கோலமாவு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட் கோலமாவு, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெண்கள் பலரும் கோலமாவு பாக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
சிலர் மணிமுக்தாற்றில் இருந்து மணலை எடுத்து வந்து சலித்து, வண்ணப்பொடிகளை சேர்த்து வீட்டிலேயே கோலமாவு தயாரித்து வருகின்றனர்.

