குறுவை சாகுபடியில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்
குறுவை சாகுபடியில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்
ADDED : ஜூலை 09, 2026 04:06 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடியில், இலை சுருட்டு புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான, காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில், குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை இடர்பாடு, உரத்தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு , தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகள், கடந் த மாதம் முதல் குறுவை சாகுபடியை, துவங்கி செய்து வருகின்றனர்.
அதே சமயம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மட்டும், 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே தமிழக அரசு, குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு விவசாயிகள் குறுவை தொகுப்பு கிடைக்காமல் வேளாண் விரிவாக்க மையத்தில் போராட்டத்தில் ஈடுபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில், தற்போது நெற்பயிர்களில் இலை சுருட்டுப் புழுவின் தாக்கம் அதிகரித்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பூச்சி நெல் இலைகளை சுருட்டி உள்ளிருக்கும் பசுமைத் திசுக்களை சேதப்படுத்துவதால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, மகசூல் இழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால், ஏற்கனவே அதிக செலவு செய்து, சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள், இலை சுருட்டுப் புழு தாக்குதலால் கவலையடைந்துள்ளனர்.
வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக வயல்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் தெரிவிப்பதோடு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
