ADDED : ஆக 14, 2026 04:40 PM
கடலுார்: நாகம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிரசித்த பெற்ற நாகம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடந்தது.
9ம் நாளான நேற்று செடல் உற்சவம் நடந்தது. அதிகாலை முதல், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
இன்று மஞ்சள் நீராட்டு விழா, வரும், 21ம் தேதி உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.
