ADDED : ஜன 10, 2026 07:05 AM

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில், தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற தலைப்பில் நேற்று நடந்தது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் இளங்கோவன், பொருளாளர் சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து வரவேற்றார்.
தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தேர்தல் கூட்டணி தொடர்பாக பிரேமலதாவிற்கு
அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட, 11 தீர்மானங்களை வாசித்தார்.
நடிகர் சண்முக பாண்டியன், துணை செயலாளர்கள் சந்திரன், பன்னீர்செல்வம், சுபா ரவி, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முருகேசன், நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் உமாநாத், வெங்கடேசன், இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, மேடையில் அமைத்திருந்த மார்பளவு விஜயகாந்த் சிலைக்கு, பிரேமலதா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
மாநாடு நுழைவுவாயிலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆலயங்கள் வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கடலுார் மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் ஆகியோர் பிரேமலதாவுக்கு, விஜயகாந்த் உருவ பொம்மையை பரிசாக வழங்கினர்.
விஜயகாந்த் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களின் வேடமிட்ட கலைஞர்கள், மேடையில் வலம் வந்து தொண்டர்களை உற்சாப்படுத்தினர். விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு நிர்வாகிகள் தொப்பி அணிவித்தனர்.
விஜயகாந்த் வரலாறு குறித்த படங்கள் எல்.இ.டி., திரையில் காண்பிக்கப்பட்டது.
- நமது நிருபர் குழு -:

