ADDED : ஜன 23, 2024 11:17 PM

அரியலுார் மாவட்ட எல்லையோரம், கடலுார் மாவட்ட போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் சுவேத நதி உள்ளது. இங்கு, இரவு நேரங்களில் மணல் திருட்டு ஜோராக நடக்கிறது.
தடுக்க வேண்டிய வருவாய், கனிம வளம், காவல் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
மணல் கடத்துவது குறித்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் 'புது டெக்னிக்' கையாளுகின்றனர். மணல் சுரண்டலில் ஈடுபடுவோருக்கு 'யாரு கொடுத்த ஐடியா'வோ தெரியல, நள்ளிரவில் சுவேத நதியில் மணல் கடத்தி வந்து, நகரில் உள்ள மனை பகுதியில் (பிளாட்டுகள்) வண்டிகளை யாரும் சந்தேகப்படாதவாறு நிறுத்தி வைத்து, காலை நேரங்களில் அரியலுார் மாவட்ட குவாரியில் இருந்து வருவது போன்று தோரனையாக நகரில் மணல் கடத்தி செல்கின்றனர்.
சுவேத நதியில் மணல் சுரண்டல் நடக்குதுன்னு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனை.

