ADDED : டிச 04, 2024 08:30 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவாமூரில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், கிராம மக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி பிரச்னையில் ஈடுபட்டதால், துணை முதல்வர் உதயநிதி அப்பகுதிக்கு செல்லாமல் திரும்பினார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவாமூரில் மலட்டாற்றில் அதிகளவில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. அதனால், அருகில் உள்ள திருவாமூர் காலனி பகுதியில் மழைநீர் புகுந்தது. அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி கூடுதல் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் ஆகியோர், நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் உதயநிதி பார்வையிடுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆனால், ஆய்வின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என, கிராம மக்கள் ஆவேசமடைந்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதனால், துணை முதல்வர் வரும்போது பிரச்னை வரலாம் என்பதால், இப்பகுதிக்கு வரவேண்டாம் என, தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், துணை முதல்வரின் திருவாமூர் வருகை ரத்து செய்யப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம் வழியாக கடலுார் சென்றார்.