/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தனி அதிகாரிகள் குடும்பத்துடன் போராட்டம்
/
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தனி அதிகாரிகள் குடும்பத்துடன் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தனி அதிகாரிகள் குடும்பத்துடன் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தனி அதிகாரிகள் குடும்பத்துடன் போராட்டம்
ADDED : ஜன 03, 2025 07:17 AM

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தனி அதிகாரிகள் நேற்று குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், தனி அதிகாரிகள் (எஸ்.ஓ.,) மற்றும் தொடர்பு அதிகாரிகள் (எல்.ஓ.,) 700 பேர் பணியாற்றி வருகின்றனர். பல்கலைகழக நிதி சிக்கல் காரணமாக, 2013ல் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது.
அதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு அயல் பணியில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக நிதி சிக்கலை குறைக்கும் வகையில், பல்கலைகழக நிர்வாகம் சார்பில் தனி அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளை பதவி இறக்கம் செய்ய அறிவித்தனர்.
அதையடுத்து, தனி அதிகாரிகள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை நாடினர். ஏழு ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்காமல், பதவி இறக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என முறையிட்டு, தடை உத்தரவு பெற்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில், பல்கலைகழக நிர்வாகம், 23 தொடர்பு அலுவலர்களுக்கு பணி நிரவலில் இடமாற்றம் வழங்கி ஆணை அனுப்பியது. இதனை கண்டித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 31ம் தேதி பதிவாளர் அலுவலம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அன்றைய தினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நேற்று காலை குடும்பத்தினருடன், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் முன்பு, தனி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.