/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை கடனை புதுப்பிக்க மறுப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
/
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை கடனை புதுப்பிக்க மறுப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை கடனை புதுப்பிக்க மறுப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை கடனை புதுப்பிக்க மறுப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
ADDED : டிச 18, 2024 07:22 AM
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் வைத்திருப்போர் தங்களது கடனை புதுப்பிக்க அனுமதி மறுப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் வெளி நபர்களிடம் மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி நகையை மீட்டு மறுநாள் அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மற்ற தனியார் வங்கிகளை விட நகைக்கடனுக்கு வட்டி குறைவு என்பதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த வங்கியில் தங்களது நகையைஅடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கடன் பெற்று ஒரு ஆண்டு முடியும் போது வட்டி கட்டி அல்லது நகைகடனை மீண்டும் புதுப்பித்து வந்தனர். இதனால் தங்களது நகை ஏலத்திற்கு செல்லாமல் பாதுகாத்து வந்தனர். இதன் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் வங்கியில் தாங்கள் பெற்ற நகை கடனை திருப்பி செலுத்தி மீண்டும் நகையை அடகு வைத்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வங்கியில் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது நகைக்கடனை புதுப்பிக்க வங்கி நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் தங்களது நகை ஏலத்திற்கு செல்வதை தடுக்க குறிப்பிட்ட தேதியில் நகையை மீட்க வேறு வழியின்றி அதிக வட்டிக்கு வெளியில் குறிப்பாக மீட்டர் வட்டிக்குபணம் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் அடகுவைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களது நகைகளை ஏலத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வெளியில் கடன் வாங்கி நகையை மீட்டு மீண்டும் அதே நாளில் வைக்க விரும்பினாலும் அதே நாளில் மீண்டும் அடகு வைக்க முடியாது என வங்கி ஊழியர்கள் திருப்பிஅனுப்புவதால் தேவையில்லாமல் ஒரு நாளுக்குரிய வட்டியை வெளி நபர்களுக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய் நகை அடமானம் வைத்துள்ளவர்கள் நகையை மீட்க வெளிநபர்களிடம் நாள் வட்டிக்கு பணம் கேட்கும் போது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நகையை குறித்த நேரத்தில் மீட்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
வங்கி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நகைக்கடனை புதுப்பிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும்.