/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் இருந்த பெட்டியில் ரூ.4 லட்சம் 'அபேஸ்'
/
பைக்கில் இருந்த பெட்டியில் ரூ.4 லட்சம் 'அபேஸ்'
ADDED : நவ 21, 2024 01:48 AM
பெண்ணாடம்:கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையைச் சேர்ந்த சகோதரர்கள் கொளஞ்சி, 48; தங்கதுரை, 41; இருவரும் விவசாயி.
தங்கதுரை அதே பகுதியில் வீட்டுமனை வாங்க, நேற்று பகல் 1:30 மணிக்கு முருகன்குடி மற்றும் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள வங்கிகளில், 4 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, பைக்கில் பெண்ணாடம் சார் - பதிவாளர் அலுவலகம் வந்தார். கொளஞ்சியும் உடன் வந்தார்.
பணத்தை பைக் பெட்டியில் வைத்துவிட்டு, பத்திரம் எழுத, எழுத்தர் அலுவலகத்திற்கு சென்றனர். எழுத்து வேலை முடிந்து வந்து பார்த்தபோது, பைக் பெட்டி திறந்த நிலையில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பெண்ணாடம் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தங்கதுரை பைக்கை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பெட்டியை மாற்று சாவி கொண்டு திறந்து, திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.
திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

