/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
/
சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
ADDED : அக் 19, 2025 03:16 AM

கடலுார்: கடலுாரில் உழவர் சந்தை பின்புறம் உள்ள சாலையை சீரமைக்கக்கோரி, விவசாயிகள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் உழவர் சந்தையில் கடலுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தையின் பின்புறம் வாழை வியாபாரிகள், வாழைத்தார் விற்பனை செய்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக, மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வருவதற்கும், வியாபாரிகள் வாங்கும் பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகளிடபும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
சாலையை சீரமைக்கக்கோரி நேற்று காலை 8:00 மணிக்கு, வாழைத்தார் பெண் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சேறும், சகதியுமாக இருந்த அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உழவர்சந்தை அதிகாரிகள், சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையேற்று 8.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.