/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு பாலம் பணி... கிடப்பில்; ஆண்டுகளாக இரு மாவட்ட கிராம மக்கள் தவிப்பு
/
சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு பாலம் பணி... கிடப்பில்; ஆண்டுகளாக இரு மாவட்ட கிராம மக்கள் தவிப்பு
சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு பாலம் பணி... கிடப்பில்; ஆண்டுகளாக இரு மாவட்ட கிராம மக்கள் தவிப்பு
சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு பாலம் பணி... கிடப்பில்; ஆண்டுகளாக இரு மாவட்ட கிராம மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 29, 2024 04:22 AM

பெண்ணாடம் : சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும், மேம்பாலப் பணி 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரு மாவட்ட கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுார், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் பெய்யும் கனமழையின்போது, ஆனைவாரி, உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தற்காலிக செம்மண் சாலை துண்டிக்கப்படும். இதனால் போக்குவரத்து பாதித்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர் பாதிப்படைந்தனர்.
அப்போது, இரு மாவட்ட கிராம மக்கள் 15 கி.மீ., சுற்றி வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு அவதியடைந்து வந்தனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட இரு மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, வெள்ளாற்றில் பாலம் கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2018ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 10 கோடியே 86 லட்சத்து 485 ரூபாய் மதிப்பில், புதிதாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. தற்போது, மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், ஓராண்டாக பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் வகையில், இணைப்பு சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால், இரு மாவட்ட கிராம மக்கள் போராடி பாலம் பெற்றும், முழுமையான பயன் கிடைக்காமல், மக்களின் பாதிப்பு தொடர்கிறது.
எனவே, மேம்பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலையை விரைந்து முடித்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்த கடலுார், அரியலுார் மாவட்ட அமைச்சர்கள், இரு மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

