பாட்டில்களுக்கு கூடுதல் விலைக்கு 'கிடுக்கிப்பிடி' :மாவட்டத்தில் திடீரென முளைத்த வியாபாரிகள்
பாட்டில்களுக்கு கூடுதல் விலைக்கு 'கிடுக்கிப்பிடி' :மாவட்டத்தில் திடீரென முளைத்த வியாபாரிகள்
UPDATED : செப் 08, 2026 07:03 PM
ADDED : செப் 08, 2026 07:02 PM
தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகளை தவிர்க்க கடந்த 1983ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலம் தொட்டு மதுபாட்டில் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. கடலுார் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனை துவங்கியவுடன் கிராமப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது, புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்துவது போன்ற செயல்கள் முழுவதும் கட்டுப்படுத்துப்பட்டது.
தற்போது அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபாட்டில்களே தனியார் சிலர் வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் பல திடீர் வியாபாரிகள் முளைத்துள்ளனர். இதற்கு காரணம் , டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் மதுபாட்டில்கள் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டு மதுக்கடை அருகே கூடுதல் விலைக்கு டாஸ்மாக் பாட்டிலை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக விருத்தாசலம், புதுப்பேட்டை, கடலுார் முதுநகர் வசந்திரான்பாளையம், பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் 20க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு சிலர் அத்துடன் புதுச்சேரி அரசு மதுபாட்டிலும் சேர்த்து விற்பனை செய்கின்றனர்.
