/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றின் போடப்பட்ட தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு! இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தவிப்பு
/
வெள்ளாற்றின் போடப்பட்ட தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு! இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தவிப்பு
வெள்ளாற்றின் போடப்பட்ட தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு! இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தவிப்பு
வெள்ளாற்றின் போடப்பட்ட தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு! இரு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 11, 2025 07:58 PM

பெண்ணாடம்; திடீர் வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலை இரண்டாவது முறை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதித்து இரு மாவட்டத்தைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலையை வழியாக அரியலுார் மாவட்டம் கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி முதுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனர்.
இதேபோன்று, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம், வடகரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனர்.
ஆண்டுதோறும் மழைக் காலங்களில் கடலுார் - அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்வதும்; பின்னர் சாலை அமைத்து பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
மழை காலங்களில் கடலுார் - அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமல், முருகன்குடி மேம்பாலம் வழியாக 10 கி.மீ., துாரமும், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு செல்வதால் இரு மாவட்ட மக்கள் பாதித்து வந்தனர்.
பாதிப்பை போக்க கடந்த 2018 அக்டோபர் மாதம், அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியே 86 லட்சத்தில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.
பாலத்தின் பணிகள் முடிந்த நிலையில் அதன் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலை பணி மட்டும் மந்தமாக நடக்கிறது. கடந்த 3 நாட்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த கனமழையில் ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பாய்ந்த மழைநீரால், நேற்று நள்ளிரவு 2:00 மணியளவில் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் சாலையில் உடைப்பு ஏற்பட்டு ,சாலை முழுவதும் துண்டித்து, கிராமப் பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலும் பாதித்துள்ளது.
இரண்டாவது முறையாக இருமாவட்ட கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீண்டும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த மே மாதம் 19ம்தேதி வெள்ளப்பெருக்கில் தற்காலிக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதித்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பாலத்தின் இருபுறமும் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க இருமாவட்ட கலெக்டர், இருமாவட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.