ADDED : ஜன 19, 2024 02:31 AM

சிதம்பரம்:கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திருவக்குளம் பகுதியைசேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அருண்பாண்டியன் 28 திருமணமாகி 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலை நகரில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த அண்ணாமலை நகர் போலீசார் அருண்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து அருகில் இருந்த வீட்டின் முன் சென்று நின்றது.
இச்சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் இரவு அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சந்திரமலை பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 1:00 மணிக்கு அங்கு வந்த அண்ணாமலை நகர் திடல் வெளியை சேர்ந்த சதீஷ் முன்விரோதம் காரணமாக அருண்பாண்டியன் தலையை கத்தியால் வெட்டி துண்டித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரிந்தது.
அதன்பேரில் தலைமறைவான சதீஷை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

