/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வியாபாரிகளுக்கு வணிகர் சங்கம் 'அலர்ட்'
/
வியாபாரிகளுக்கு வணிகர் சங்கம் 'அலர்ட்'
ADDED : மார் 20, 2024 05:04 AM
விருத்தாசலம், : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அப்போது, வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கம் மற்றும் வணிக ரீதியான பொருட்களுக்கு முறையான ரசீது இல்லாவிட்டால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த தாலுகாக்களில் உள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்படும்.
இவற்றுக்கு உரிய ஆவணங்கள் சமர்பித்ததும், தேர்தல் முடிந்ததும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற நடைமுறைகளால் வணிகர்கள் பெருமளவு பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், விருத்தாசலம் நகர வர்த்தகர் சங்கம் சார்பில், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், 'வாட்ஸ்ஆப்' குழு துவக்கப்பட்டு, அதன் மூலம், தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
அதில், வியாபாரிகள் வாகனங்களில் பொருட்கள் எடுத்து செல்லும்போது, ரசீது கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும். கடைகளில் வாங்கிய ரொக்கப் பணத்துக்கு ரசீது, பில் நம்பர், கடையின் பெயர், பணம் கொடுத்தவரின் மொபைல் எண் ஆகியவற்றை ரசீதில் அவசியமாக எழுதி வைத்திருக்க வேண்டும். இது குறித்த குறிப்புகளை தயார் நிலையில் வைத்திருந்தால், பறக்கும் படையினரிடம் காண்பிக்கலாம். இவற்றை வீடியோ பதிவு மூலம் அதிகாரிகள் சரிபார்த்து, அனுப்பி வைப்பார்கள் போன்ற வாசகங்கள் பகிரப்பட்டு வருகிறது. இது, வியாபாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

