/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு! விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
/
பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு! விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு! விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு! விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
ADDED : செப் 06, 2024 12:09 AM

கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பாக உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ், கார், வேன் மட்டுமின்றி கடலுார் துறைமுகம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம், தனியார் சிமென்ட் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், சேலம் இரும்பு உருக்காலை போன்ற பெரு நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் இதன் வழியாக செல்கின்றன.
அதிக வாகன போக்குவத்து காரணமாக, விருத்தாசலம் வழியாக கடலுார் - சேலம் (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 275 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுபோல், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 22 கி.மீ., சாலை, 136 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும், நகரின் பிரதான ஜங்ஷன் சாலை, பெண்ணாடம் ரோடு, தென்கோட்டை வீதி உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்டங்கள் மூலம் பிளாட்பார்ம் வசதியுடன் அகலப்படுத்தப்பட்டன.
ஆனால், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வர முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக கடைகளின் முகப்பு ெஷட், விளம்பர பலகைகள், ராட்சத டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளதால் அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையின் குறுக்கே நிறுத்தும் அவலம் தொடர்கிறது.
இதனைச்சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகும்போது, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் இணைந்து, கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவர். ஓரிரு நாட்களில் மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பது தொடர்கிறது.
இதை தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, வியாபாரிகள் தரப்பில் அவகாசம் கேட்டதன்பேரில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நகரம் முழுவதும் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, விருத்தாசலம் நகர பிரதான சாலைகளில் முளைத்துள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிட அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாறுமாறாக தள்ளுவண்டிகள்
நகர சாலைகள் விரிவாக்கம் செய்தபோது, இருபுறமும் பிளாட்பார்ம் அமைக்கப்பட்டது. வணிக நிறுவனங்களுக்கு செல்வோர், கடை ஊழியர்கள் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சென்றனர். ஆனால், பிளாட்பார்ம் முழுவதும் தள்ளுவண்டிகளில் பூ, பழம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதால், மற்ற வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் மீண்டும் சாலையில் நிறுத்தும் அவலம் தொடர்கிறது.
பார்க்கிங் இல்லாமல் வணிக நிறுவனங்கள்
பெருவணிக நிறுவனங்களில் ஒன்றிரண்டு தவிர மற்றவை, பார்க்கிங் வசதியின்றி உள்ளது. இவற்றுக்கு வருவோர், கடைகளுக்கு முகப்பில் டூவீலர், கார்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், அவர்கள் திரும்பி வந்து வாகனங்களை எடுக்கும் வரை, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிக்கிறது. எனவே, பிரதான சாலைகளில் தற்காலிக வாகன நிறுத்தங்களை உருவாக்கி நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.