/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் நகை,பணம் திருடிய இரண்டு பேர் கைது
/
நெய்வேலியில் நகை,பணம் திருடிய இரண்டு பேர் கைது
ADDED : அக் 15, 2025 02:16 AM

நெய்வேலி : நெய்வேலியில் நகை மற்றும் பணம் திருடிய இருவரை தெர்மல் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 20 வது வட்டத்தை சேர்ந்த சாந்தகுமார் மகன் அன்பழகன், 40; இவர் இந்திரா நகர் பகுதியில் உடல் பரிசோதனை லேப் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 30ம் தேதி அன்பழகன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றிருந்தார். வெளியூர் சென்றுள்ளதை அறிந்த மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, 19 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் எல்லைக்குட்பட்ட வாணதிராயபுரம் கிராமத்தை என்.எல்.சி., ஊழியர் ஜெரோம் வீட்டில் 13 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
கடலூர் எஸ்.பி., உத்தரவின் பேரில் நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், நெய்வேலி டவுன்ஷிப்பிலுள்ள என்.எல்.சி., நடுநிலைப்பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் நெய்வேலி டவுன்ஷிப் 20வது வட்டத்திலுள்ள சதுரம் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் தாமஸ் வில்லியம், 65; மற்றும் வடக்கு மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வில்லமுத்து, 28; என்று தெரிய வந்தது.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், அன்பழகன் மற்றும் மற்றும் ஜெரோம் வீடுகளில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்டவர்களிடமிருந்து 16 சவரன் நகைகள் மற்றும் 348 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் சென்று குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டினார்.