போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்: பொதுமக்கள் அவதி
போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்: பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 10, 2026 03:06 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்கள், தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் வழியாக பஸ், லாரி, சிமென்ட் லோடு லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
மேலும், இங்கு அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளதால் பழைய பஸ் நிலையம், கடைவீதி பகுதி எந்நேரமும் மக்கள் கூட்டம் மிகுந்து நெரிசலாக காணப்படும்.
பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரை உள்ள கடைகளுக்கு காலை, மாலை வேளைகளில் வந்து செல்வோர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். மேலும், தள்ளுவண்டி வியாபாரிகளும் வண்டிகளை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, பெண்ணாடம் கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
