ADDED : ஜூலை 09, 2026 04:07 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், ஏழை விவசாயிகளின் தேவைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசியதாவது:
ஏழை விவசாயிகளின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழு கடன் சார்பில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் சுய உதவி குழு கடன், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன்னை மகளிர் சுய உதவி குழு கடன் என மொத்தம் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடன் தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லுாரியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்கள் மற்றும் குழு நடன மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடலுார் மாவட்டத்தில், 290 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய கூட்டுறவு வங்கி, சரவணபவா நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், மாவட்ட கூட்டுறவு அச்சகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை இன்றைய காலத்திற்கேற்ப கணினிமயமாக்கப்பட்டு முன்னோடி நிறுவனமாக மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றன.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் கடந்த ஏப்ரலில் இருந்து, முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேலும், மாவட்டத்தில் 502 வேளாண் இயந்திரங்கள் இ-வாடகை செயலி மூலம் இணையவழியில் முன்பதிவு செய்து விவசாயிகளுக்கு 6 நெல் அறுவடை இயந்திரம், 48 டிராக்டர் மற்றும் களைப்பைகள், 6 சிறிய வகை டிராக்டர், 161 கைத்தெளிப்பான்கள் மற்றும் விசை தெளிப்பான்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
