/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவட்டத்துறை வெள்ளாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
திருவட்டத்துறை வெள்ளாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
திருவட்டத்துறை வெள்ளாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
திருவட்டத்துறை வெள்ளாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 23, 2024 11:16 PM
திட்டக்குடி; திருவட்டத்துறை - சன்னாசிநல்லுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் எனகடலுார், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை - சன்னாசிநல்லுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள மண் சாலையை பயன்படுத்தி, திருவட்டத்துறை, கொடிக்களம், கூடலுார், இறையூர், தொளார், மேலுார், மருதத்துார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு செந்துறை, அரியலுார், ஜெயங்கொண்டம், அகரம் சீகூர், வேப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதேபோன்று, அரியலுார் மாவட்ட கிராமங்களான சன்னாசிநல்லுார், சிவராமபுரம், புதுஅங்கனுார், அங்கனுார், வேள்விமங்கலம், குழுமூர், த.கூடலுார், தளவாய், செங்கமேடு, மதுராநகர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர், நல்லுார் பகுதிகளுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் கோடை மழை காலங்களில் தொழுதுார் அணைக்கட்டு, பெரம்பலுார் மாவட்டம், சின்னாறில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது, மண் சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கும். இதனால் இருமாவட்ட கிராம மக்களும் 15 முதல் 20 கி.மீ., துாரம் சுற்றி வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
பின்னர், வெள்ளம் வடிந்ததும் இரு மாவட்ட கிராம மக்களும் சேர்ந்து ஆற்றில் மண் சாலை அமைத்து வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். போக்குவரத்து பாதிப்பை போக்க வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இருமாவட்ட மக்களும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக, கடலுார் மாவட்டம் திருவட்டத்துறை, இறையூர், கூடலுார் ஆகிய ஊராட்சிகள்; அரியலுார் மாவட்டம், சன்னாசிநல்லுார் ஊராட்சி சார்பில் நடந்த கிராம சபை கூட்டங்களில் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரியலுார் மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சார்பில், வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட அளவீடு செய்யும் நடந்தது. அதில், 375 மீட்டர் அகலம் வெள்ளாறு உள்ளது எனவும், விரைவில், பாலம் கட்டுவதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என இருமாவட்ட மக்களிடம் தெரிவித்து சென்றனர்.
ஆனால் இதுநாள் வரை பாலம் கட்ட எவ்வித பணிகளும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதுதான் மிச்சம் என கிராம மக்கள் புலம்பி வருகின்றனர்.
எனவே, கடலுார், அரியலுார் மாவட்ட கிராம மக்கள் நலன்கருதி, திருவட்டத்துறை - சன்னாசிநல்லுார் இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட இருமாவட்ட அமைச்சர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.