ADDED : ஆக 31, 2026 08:54 PM
கடலுார் பஸ் நிலையம்... மாநகர மக்கள் எதிர்பார்ப்பு
கடலுார், செப். 1–
கடலுாரில் பஸ் நிலையம், எம்.புதுாருக்கு மாற்றப்படுவது நிறுத்தப்பட்டதால் தற்போது இயங்கி வரும் இடத்திலேயே விரிவாக்கம் செய்ய வேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலுார் நகராட்சியை கடந்த தி.மு.க., ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனையொட்டி, மாநகரம் விரிவடைய வேண்டும் எனவும், விழுப்புரம்–நாகப்பட்டினம் புறவழிச்சாலை அருகே செல்வதாலும் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை துவங்கியது. இதனால் சமான்ய மக்களுக்கு பெரும் அவதிப்பட வேண்டிய நிலை வரும். தேவையற்ற ஆட்டோ செலவு, இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, லோக்கல் பஸ் கட்டணம் என கூடுதல் செலவு, மாநகரம் வளர்ச்சி பெறும் போது வேண்டுமானால் பஸ் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம் என கடலுார் மாநகர மக்கள், அரசியல் கட்சிகள் இந்த பஸ் நிலைய கட்டுமான பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் பணிகள் முடிவுறும் நேரத்தில் தி.மு.க., ஆட்சியை இழந்தது. தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் கடலுாலுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான ராஜ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், எம்.புதுாரில் பஸ் நிலையம் மாற்றப்படாது. மக்களுக்கு பிடிக்காத செயலை இந்த அரசு செயல்படுத்தாது என்றார். எனவே கடலுார் பஸ் நிலையம் எம்.புதுாருக்கு மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.
கடலுார் நகரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டப் பின்னர், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அவசியமானதாக உள்ளது. அதனால், தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி இயங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என மாநகர மக்கள் விரும்புகின்றனர்.
எனவே தற்போது செயல்பட்டு வரும் பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு அச்சகம் மற்றும் அரசு மோட்டார் பணி மனை ஆகியவை அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்கள் இன்னும் சற்று துாரத்திற்கு மாற்றுவதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. எனவே அந்தந்த துறை அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் கிடைக்க கூடிய பெரிய இடத்தில் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தை விரிவு படுத்திக் கொள்ள மாவட்ட அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
