ADDED : பிப் 07, 2026 04:08 AM
சிறுபாக்கம்: ஊராட்சி செயலர்கள் தொடர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மங்களூர் ஒன்றியத்தில், 66 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகள் தோறும் குடிநீர், சுகாதாரம், தெரு மின் விளக்கு பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்துகிறது. மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால், அந்தந்த ஊராட்சி செயலர்கள் தனி அலுவலர்களாக நியமித்து ஊராட்சிகளை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கடந்த 4ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் பங்கேற்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல ஊராட்சிகளில் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடப்பது உட்பட பல்வேறு பணிகள் பாதித்துள்ளதால் மக்கள் அவதியடைகின்றனர்.

