ADDED : மார் 26, 2026 10:53 PM
விருத்தாசலம்: மதுபோதையில் பழ வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மூவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் வி.என்.ஆர்., நகரை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜ்குமார், 27; பழ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு தனியார் மதுபான கூடத்தில் இருந்து வெளியே வந்தபோது, மேட்டுக்காலனி அருண்குமார், சாத்துக்கூடல் நவீன், மணலுார் பிஜிலி (எ) பிரியன் ஆகியோர் ராஜ்குமாரிடம் இருந்து அவரது பைக்கை கேட்டு வாங்கிச் சென்றனர்.
நீண்ட நேரமாகிறதே எனக்கேட்ட ராஜ்குமாரை, போதையில் இருந்த மூவரும் ஆபாசமாக திட்டி, கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த ராஜ்குமார், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரன் மகன் அருண்குமாரை, 22, கைது செய்தனர்.
