ADDED : ஆக 29, 2026 04:31 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயிலிருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி –சென்னை ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே சாத்துக்கூடல் பகுதியில், நேற்று காலை ரயில்பாதையோரம் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.
இறந்து கிடந்த நபர், வெள்ளை வேட்டி, கருப்பு சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவரது சட்டை பையில், விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் இருந்து சென்னை செல்வதற்கான ரயில் டிக்கெட் இருந்தது. ஆனால், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. நள்ளிரவில், சென்னை மார்க்கமாக சென்ற ரயிலில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிந்தது.
சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
