/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதல் நிலையம்
/
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதல் நிலையம்
ADDED : மார் 08, 2025 02:44 AM
அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதல் நிலையம்
அரூர்: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, அரூர் மற்றும் நரிப்பள்ளியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால், அரூர், நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
தற்போது, நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், இடைத்தரகர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட குறைவான விலைக்கு நெல்லை வாங்குவதால், ஒரு குவிண்டாலுக்கு, 500 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரூரில், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்த செய்தி கடந்த, பிப்., 19ல் காலைக்கதிர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, அன்றே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தர்மபுரி மண்டல மேலாளர் தேன்மொழி, அரூர் வேளாண் அலுவலர் குமார், துணை வேளாண் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர், நரிப்பள்ளி, மந்திகுளாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, புதுப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களை பார்வையிட்டதுடன், அதன் பரப்பு குறித்து கணக்கீடு செய்தனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு, 2024-25 சம்பா பருவத்தில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம், இரண்டு இடங்களில் வரும், 11 முதல், நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், நரிப்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படும்.
சன்னரகம் குவிண்டால், ஒன்று, 2,450 ரூபாய்க்கும், பொது ரகம் குவிண்டால் ஒன்று, 2,405 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளிடம் நெல் விற்பனை செய்வதை தவிர்க்கும்படி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.