/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்
/
ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்
ADDED : ஆக 05, 2024 02:21 AM
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் முக்கிய ஆன்மிக தலமாக உள்ளது. இங்கு, தை, ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிவது வழக்கம். ஆனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 85,000 கன அடியாக அதிகரித்ததால், 19வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், மடம் சோதனைச்சாவடியிலேயே சுற்றுலா பயணிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், ஆடி அமாவாசையான நேற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, முதலைபண்ணை எதிரே காவிரியாற்றில் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. பென்னாகரம்
டி.எஸ்.பி., மகாலட்சுமி தலைமையிலான போலீசார், 10 பேருக்கு அனுமதி வழங்கி, அவர்கள் தர்ப்பணம் கொடுத்து திரும்பிய பிறகே, அடுத்த, 10 பேரை அனுமதித்து வந்தனர். மேலும், தர்ப்பணம் கொடுப்பவர் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே, ஆற்றில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், ஒகேனக்கல் காவிரிக்கரையோரம் வெறிச்சோடியது.