/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஆக 05, 2024 02:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்திலுள்ள, குருமன்ஸ் இன மக்கள், வீரபத்திர சுவாமியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று, அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு வீரபத்திர சுவாமியை எடுத்து சென்று, சிறப்பு பூஜை செய்கின்றனர். மேலும், கத்தி கழுவுதல் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அடுத்த நாள் காலை, தங்களது முன்னோர்களை வணங்கி, வீரபத்திர சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் தங்களது தலையில், தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
நேற்று, வீரபத்திர சுவாமிக்கு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவிலில் இருந்து வீரபத்திர சுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகளை அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்கு ஊர்வலமாக மக்கள் எடுத்து வந்தனர். அங்கு, சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, படையல் போட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கப்பட்டது.
பையர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து மேளதாளத்துடன் சுவாமி ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தது. விழாவில் சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.