ADDED : ஆக 22, 2024 02:02 AM
பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 22-
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், காணியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், சுவாமி திருக்கல்யாணம், வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளம், பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை, 11:00 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து, அரூர் - சேலம் பிரதான சாலையில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது, தேர் மீது பக்தர்கள் முத்துக்கொட்டை, உப்பு, மிளகை வீசி வழிபட்டனர். திருவிழாவில், 30,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., ஜெகன்நாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை முதல், ஞாயிற்றுக்கிழமை வரை, அ.புதுப்பட்டி, பாப்பம்பாடியில் தேர் கடை திருவிழாவும், வரும் வெள்ளிக்கிழமை முனி பிடிக்கும் திருவிழாவும், சனிக்கிழமை இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி, நாகலுாரில், காணியம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.