/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொழிலாளி மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்
/
தொழிலாளி மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்
ADDED : ஜூன் 05, 2025 01:44 AM
தர்மபுரி,சூளகிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், மூளைச்சாவு ஏற்பட்ட தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படியிலிருந்து மாங்காய் லோடு ஏற்றிய பிக்கப் வாகனம், கிருஷ்ணகிரி நோக்கி கடந்த, 29ம் தேதி மாலை சென்றது. மாங்காய் லோடு மீது சென்னசந்திரத்தை சேர்ந்த, 14 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளியில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது.
இதில் தொழிலாளர்கள் பத்மா, தேவராஜ் ஆகியோர் பலியாகினர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்தம்பி நேற்று இறந்தார். படுகாயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னகிருஷ்ணன், 50, என்பவருக்கு, நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி அன்றைய தினமே அவரது கல்லீரல் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், 2 சீறுநீரகம் கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கும், கண்கள், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த சென்னகிருஷ்ணனின் உடலுக்கு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.